சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து தாமதமாகி வரும் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நடத்துமாறு தமிழகத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பொழுது அதில் இட ஒதுக்கீட்டு நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கடந்த பிப்ரவரி 22 - ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், மே மாதம் 14 - ஆம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பல்வேறு நடைமுறைக் காரணங்களால் மே 14 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த முடியாது. ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தவில்லை. இதனை எதிர்த்து சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவரும், திமுகவும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தொடர்ந்து தாமதமாகி வரும் உள்ளாட்சித் தேர்தலை, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நடத்துமாறு : தமிழகத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது
அத்துடன் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஜூலை 26-ஆம் தேதி அன்று நீதின்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தர விட்டது. அதற்குப்பிறகு அடுத்த கட்ட உத்தர வு பிறப்பிக்கபப்டும் என்றும் கூறியுள்ளது.
அப்பொழுது தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இப்பொழுதே 21 தேதி ஆகிவிட்டது. அத்துடன் தேர்தல் அட்டவனை வெளியிட்டு ஒரு மாதம் கழித்துதான் தேர்தல் நடத்த முடியும் என்று தெரிவித்தார். அதற்கு என்னும் எத்தனை காலம்தான் நேரம் கேட்டு காலம் தாழ்த்த போகிறீர்களென்று நீதிமன்றம் கடிந்து கொண்டது.