தமிழ்நாட்டு அரசியல் களத்தைப் பலப்படுத்துவதற்கு கமல்ஹாசன் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால், இவ்வளவு காலம் திரைத் துறையில் இருந்துள்ள அவர் மக்களுக்காக எத்தனை பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார். மக்களுக்காக அக்கறையோடு எவ்வளவு காலம் செயல்பட்டார்.
ஊழலுக்கு எதிராகத்தான் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கமல்ஹாசன் வந்துதான் தமிழ்நாட்டு அரசியல் களத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியொரு சூழ்நிலை தமிழக அரசியல் களத்தில் இல்லை. சுயநலவாதிகள் வந்துதான் தமிழக அரசியல் களத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்போராட்டங்களைத் திசை திருப்புவதற்கான செயல்கள்தான் அதிகமாக நடக்கின்றன. தமிழ்நாட்டில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் வரத் தொடங்கி இருக்கிறது என்ற அபாயகரமான நிலை உள்ளது.
நேபாளம் வழியாக வந்த நக்சலைட்டுகள் தமிழகத்தில் பல இடங்களில் பணியில் இருப்பதாகவும், இத்தகையவர்களால் சில போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதும் கவலை தரக்கூடியதாக இருக்கிறது.
பக்கத்து மாவட்டங்களில் மீத்தேன், கேஸ் எடுப்பதைத் தடுத்தது பாஜகதான். ஆனால், அவற்றுக்கு முதலில் அனுமதி அளித்தது திமுகவும், காங்கிரசும்தான். இங்கு தவறான வழிகாட்டல்கள் இருக்கின்றன.
மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. மக்களிடையே அச்சத்தைப் போக்கி, தெளிவுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றார் தமிழிசை செளந்தரராஜன்.