சென்னையில் மத்திய அதிவிரைவுப் படையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.
மத்திய ரிசர்வ் போலீஸின் கீழ் இயங்கும் அதிவிரைவுப் படையினர் கோயம்புத்தூரில் இருந்து வியாழக்கிழமை சென்னை வந்தனர். இவர்கள் நெருக்கடி காலங்களிலும், வன்முறை சம்பவங்களின்போதும், கலவரங்களின்போதும் சென்னையில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் எப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், காவல்துறையினர், பொதுமக்களை எப்படிக் கையாள வேண்டும், வன்முறையாளர்களை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக சென்னை வந்திருந்தனர்.
அதிவிரைவுப் படை கமாண்டன்ட ரஞ்சிதா தலைமையில் சுமார் 105 காவலர்கள் அவருடன் வந்திருந்தனர். அவர்கள், சென்னையில் இதற்கு முன் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போதும், கலவரங்களின்போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நகரின் முக்கியமான பகுதிகளான மெரீனா கடற்கரை, ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகம், முக்கியமான அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு
செய்தனர்.
இந்த ஆய்வுப் பணி, வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அதிவிரைப்படையினர் தெரிவித்தனர். மத்திய அதிவிரைப்படையினர்,முக்கியமான நகரங்களில் இதுபோன்ற ஆய்வுப் பணியையும், பயிற்சிகளையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்துவது வழக்கமானதுதான் என சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.