சென்னை: திரிசங்கு சொர்க்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இருந்து வருவதாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழ் "நமது எம்ஜிஆர்" -இல் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஊழல் குறித்து புகார் அளிக்கும்படி ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டார். இதற்கு அதிமுக அமைச்சர்களும் தினம்தினம் விமர்சனம் செய்து பேட்டி அளித்து வந்தனர்.
இந்நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழ் நேற்று முன் தினம் சித்ரகுப்தன் எழுதியுள்ள கவிதை பகுதியில் கமல்ஹாசனை விமர்சித்திருந்தது.
இதையடுத்து இன்று இது குறித்து ‘திரிசங்கு சொர்க்கத்தில் நடிகர் கமல்’ என்ற தலைப்பில் விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், அரசை எதிர்த்து ஆர்வக் கோளாறு காரணமாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருப்பதை திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தமிழகமே தனக்கு பக்கபலமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு கமல் தினமும் ஒரு கருத்தை அரசுக்கு எதிராக பதிவு செய்து வருகிறார்.
உணர்ச்சிவசப்பட்டு அவர் செய்கின்ற செயல்களும் சொல்லுகின்ற கருத்துகளும் இப்போதைக்கு அவருக்கு பெரும் விளம்பரத்தை ஏற்படுத்தும் என்றாலும் பின்னால் அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்று புரியாமல் இருக்கிறார்.
இன்று கமல்ஹாசனுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கட்சிகள் காலப்போக்கில் கைகழுவி விட்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.
அரசுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளெல்லாம் கமல்ஹாசனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இதுவொரு சந்தர்பமாக கருதுகின்றன. அதை புரிந்து கொள்ளாமல் ஒட்டுமொத்த தமிழகமும் அரசியல் கட்சிகளும் தன் பின்னால் இருப்பதாக கமல்ஹாசன் தப்புக் கணக்கு போட்டால் அதன் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.