நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

நாகையிலிருந்து விசைப் படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 8 பேர், இலங்கைக் கடற்படையினரால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

நாகையிலிருந்து விசைப் படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 8 பேர், இலங்கைக் கடற்படையினரால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
நாகை ஆர்யநாட்டுத் தெருவைச் சேர்ந்த சி. ரவிபாலன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அமிர்தலிங்கம் (35), குமரன் (30), சக்திவேல் (23), ஆர்யநாட்டுத் தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை (42), நம்பியார் நகரைச் சேர்ந்த வீரையன் (30), பாலமுருகன் (35), ராஜேஷ் (25), கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மாரியப்பன்(32) ஆகிய 8 பேரும் நாகை துறைமுகத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை (ஜூலை 17) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு கோடியக்கரைக்குத் தென்கிழக்குக் கடல் பரப்பில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், மீன்பிடி படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
எல்லை தாண்டி, இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை இலங்கை அரசு அண்மையில் நிறைவேற்றிய நிலையில், இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைது எண்ணிக்கை உயர்வு: கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 44 பேர் ஏற்கெனவே இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் எண்ணிக்கை 52}ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com