கதிராமங்கலம் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனுக்கு, அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
கதிராமங்கலம் போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி தஞ்சை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனு தாக்கல் செய்தார். அதில், எனது தந்தை உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இறந்துவிட்டார். அவருக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டியுள்ளதால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ. நிஷாபானு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை 3 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.