அடுத்த சில நாள்கள் தென் மாவட்டங்கள், உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: தென்மேற்குப் பருவ மழை, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மேற்குக்கரையோரப் பகுதிகளில் பரவலாகப் பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் வெப்ப நிலை குறைந்தே காணப்படும்.
வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் இருப்பதால் வெயிலின் தாக்கம் தரைப் பகுதிகளில் குறைந்து காணப்படுகிறது. ஆனால், கடந்த சில தினங்களாக கேரளப் பகுதியில் பருவ மழை குறைந்து விட்டது, மேல்நிலைக் காற்றில் ஈரப்பதம் குறைந்து உலர்ந்த நிலை இருப்பதால் வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி அளவுக்கு அதிகமாவே இருக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர்.
122 ஆண்டுகளுக்குப் பின் : தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்துக் காணப்படுகிறது. கோடை காலத்தைப் போன்று பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வருகிறது. கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலத்தில்தான் இதுபோன்று மாநிலத்தில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாவது வாடிக்கை.
ஆனால், தற்போது ஜூலை மாதத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 101 டிகிரி வெயில் இருந்தாலும் கடல் காற்று இல்லாததால் கடுமையான வெப்பம் நிலவியது.
மாநிலத்தின் பல இடங்களிலும் இதே நிலை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 21) கடலூரில் அதிகபட்சமாக 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. 122 ஆண்டுகளுக்குப் பின், ஜூலை மாதத்தில் கடலூரில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலை இது.
இதற்கு முன் கடந்த 1895 }ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இதே அளவு வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாறு காணாத வெப்பநிலை பதிவுக்கு, மேகங்களற்ற தெளிவான வானம், காற்று கீழிறங்கி (ஈங்ள்ஸ்ரீங்ய்க்ண்ய்ஞ் ஹண்ழ்) அழுத்தம் பெறுதல், மேற்கிலிருந்து மிதமான வேகத்தில் வீசிய வட காற்று ஆகியவையே முக்கியக் காரணம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி வெயில் பதிவானது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
மதுரை 107
திருச்சி, வேலூர் 104
திருத்தணி 103
கரூர் பரமத்தி, நாகப்பட்டினம் 102
சென்னை (மீனம்பாக்கம்) 101
கடலூர் , சேலம் 100
புதுச்சேரி 100
காரைக்கால் 101