பிரதமர், ராம்நாத் கோவிந்துடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியைச் சேர்ந்த அதிமுக எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியையும், குடியரசுத் தலைவர் பதவிக்கு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தனது ஆதரவு அதிமுக எம்பிக்களுடன் திங்கள்கிழமை சந்தித்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தனது ஆதரவு அதிமுக எம்பிக்களுடன் திங்கள்கிழமை சந்தித்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியைச் சேர்ந்த அதிமுக எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியையும், குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் பதவி வேட்பாளர் எம். வெங்கய்ய நாயுடு ஆகியோரை திங்கள்கிழமை நேரில் சந்தித்தனர்.
நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு அதிமுக எம்பிக்கள் வா.மைத்ரேயன், பார்த்திபன், பி.ஆர்.சுந்தரம், கே.அசோக்குமார், எஸ்.ராஜேந்திரன், சத்யபாமா, ஆர்.லட்சுமணன், ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும், தமிழக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எம்எல்ஏ செம்மலை, முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட சிலரும் நேரில் சந்தித்தனர்.
அதன்பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்தை அக்பர் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். இச்சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் வட்டாரத்தில் கேட்ட போது,'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' எனத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் எம்.வெங்கய்ய நாயுடு இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்துக் கூறினர். அப்போது, செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், 'குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் எம்.வெங்கய்ய நாயுடு வெற்றி பெறுவது உறுதி. இதனால், அவரை நேரில் வாழ்த்தி, ஆதரவு தெரிவிக்க வந்தோம்' என்றார்.
பின்னர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், 'எனக்கு நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நன்றி. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது என் மீது தனிப்பட்ட மரியாதையும், பாசமும் கொண்டிருந்தார். அவர் முதல்வராக இருந்த போது மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டார். நான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இருந்து எம்பியாக உள்ளேன். தற்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்துக் கட்சிகளுடனும் பாரபட்சமின்றி இணைந்து செயல்படுவேன். மாநிலங்களவையையும் சிறப்பாக வழிநடத்திச் செல்வேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com