சென்னை: சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு தமிழ் மொழிக்கு 2004-இல் செம்மொழி அந்தஸ்து அளித்தது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் பணிகள் ஆரம்பத்தில் மைசூரில் இயங்கி வந்த இந்திய செம்மொழிகள் மத்திய ஆய்வு நிறுவனத்திடம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தமிழகத்திற்கு மாற்றப்பட்டு, 2007-ஆம் ஆண்டு முதல் சென்னையில் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நடவடிக்கையானது தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியினை உண்டாக்கியது.
தன்னாட்சி நிறுவனமாக தற்போது செயல்பட்டு வரும் ஒரு அமைப்பினை குலைப்பதான முயற்சி என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைசாமியில் அதிகாரிகள், தமிழ் அறிஞர்கள் பங்கு பெற்ற கூட்டம் ஒன்று இன்று சென்னையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தின் முடிவில் சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுடன் கலந்து பேசி உறுதியான நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் அதிக அளவிலான நிதியினை கோரிக் பெறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.