நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டப்படுவதாக, தியாகராய நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வழக்கறிஞர் ஆணையராக இளங்கோவனை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அவர் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், 'சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வு, பொது சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க மனுதாரருக்கு பலமுறை சந்தர்ப்பம் வழங்கியும், அவர்கள் நிரூபிக்கவில்லை எனக் கூறி, நடிகர் சங்க கட்டட கட்டுமானத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.