நீட் தேர்வுக்கு 2 ஆண்டுகள் விலக்கு: சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு 2 ஆண்டுகள் விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை இயற்றுவது குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு 2 ஆண்டுகள் விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை இயற்றுவது குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முதுநிலை மருத்துவப் படிப்பை விடுத்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மட்டுமே விலக்கு பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சட்ட மசோதா: இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையிலான இரண்டு சட்ட மசோதாக்கள் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய உள்துறையில் நிலுவையில் உள்ள இம்மசோதாக்கள் இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று அதற்கான முடிவு வெளியிடப்பட்டது. மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் வழங்கும் வரையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
நீதிமன்றத் தடை: அதன் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்தனர். ஜூலை 14-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 17-ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடத்தவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் 85 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 14-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய அரசுக்கு அழுத்தம்: இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள் 2 முறை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரிடம் வலியுறுத்தினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார்.
விலக்கு அளிக்க முடிவு: இந்நிலையில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் தாற்காலிக விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, தாற்காலிக விலக்குப் பெறும் வகையில் அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் தமிழக ஆளுநர் அனுமதியுடன் மத்திய அரசுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் உயர் அதிகாரி கூறியது: மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் நீட் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாத நிலை. மேலும் நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது உள்ளிட்டக் காரணங்களால் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அவசரச் சட்டம் உதவுமா என்பதன் சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கும் வகையிலான அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அவசரச் சட்டம் என்பது ஆலோசனை நிலையிலேயே உள்ளது. அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம். எனவே, மத்திய அரசிடமும் சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களிடம், செயலாளர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம். மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற வழக்கிலும் தெளிவு பெற வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு: அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com