ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்ற வி.கே.சசிகலா, ஒரு அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர் பதிவியில் இருக்கத் தகுதியற்றவர் என கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்தது.
இதுதொடர்பான தங்கள் தரப்பு கோரிக்கை மற்றும் சாட்சியங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி அளித்திருந்தது. மேலும், இந்த சாட்சியங்கள் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வசீகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அஇஅதிமுக-வின் பொதுச் செயலாளராக ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்ற வி.கே.சசிகலா செயல்படுகிறார். அவரின் உத்தரவின் பேரில்தான் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்.
இது முற்றிலும் தவறான செயலாகும். எனவே இந்திய தேர்தல் ஆணையம் இதனை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் இதுபோன்று ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்களில் தண்டனை பெற்றவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக உள்ளதை சுட்டிக்காட்டி அதன் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு முதல்வரோ அல்லது அமைச்சரோ யாரிடம் அறிவுரைப் பெற வேண்டும் என்பது போன்ற கட்டளை எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் வலியுறுத்த முடியாது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது எனக் கூறி வசீகரன் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.