தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகள் தரமற்றவை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலின் தரம் குறித்து ஆதாரம் இல்லாமல் பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஹட்சன், விஜய் டைரி உள்ளிட்ட 3 தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அமைச்சரின் கருத்தால் நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் தலா ஒரு கோடி ரூபாயை மூன்று நிறுவனங்களுக்கும் மான நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டுமென்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனுதாரர்களுக்கு எதிராக பேசக்கூடாது என்று அமைச்சருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்குப் பதில் மனு தாக்கல் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "தன்னை மிரட்டும் விதமாக இந்த வழக்கை தனியார் பால் நிறுவனங்கள் தெடர்ந்துள்ளன, வழக்குத் தொடர்ந்துள்ள மூன்று நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருள்கள் தரம் குறைந்தவைதான் என்று பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை, நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த 3 நிறுவனங்களின் பால் மாதிரிகளை உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள "ரெஃப்ரல் புட் டெக்னாலஜி' ஆய்வகத்தில் சோதனை செய்தது தொடர்பான அறிக்கைகள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்படி இந்த 3 நிறுவனங்களின் பால் மாதிரிகள் தரமற்றவை என்று கூறப்பட்டுள்ளது. பால் நிறுவனங்களின் சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டுக்கொண்டதால், இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.