பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், அதை ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் குறிப்பிட்ட பிரிவு மக்களை இழிவுபடுத்தும் வகையில் தவறான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இதுதொடார்பாக அவரும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தோம்.
ஆனால், இரண்டு வாரத்துக்கும் மேலாகியும் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. எனவே, காயத்ரி ரகுராம், கமல்ஹாசன், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர உள்ளேன். இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மணிமண்டபத்தில் பகவத் கீதை, குரான், பைபிளுடன் திருக்குறளையும் வைக்க வேண்டும். இவ்விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்றார்.