புதுதில்லி: இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது தோழர் மல்லிகார்ஜுனாவுக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் ஆகிய இருவரும் தில்லி காவல்துறையினரால் ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தில்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் சவுத்திரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து தில்லி காவல்துறை சார்பில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனன் ஆகிய இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தினகரனுக்கு நான்கு நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் விசாரணைக்கு கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் கடந்த முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பொழுது தில்லி காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் தினகரன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது தோழர் மல்லிகார்ஜுனாவுக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகிய இருவரும் ரூ.ஐந்து லட்சத்திற்கு பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்., அத்துடன் அவர்களிருவரும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் சாட்சிகளை கலைக்க திட்டமிடக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த உடன் நாளை அல்லது நாளை மறுநாள் தினகரன் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.