சென்னை: தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடையில் இருந்த ரூ.420 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியிருப்பதும், கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் உஸ்மான் சாலை பகுதியில் இரண்டாவது நாளாகவும் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அங்கு முற்றிலும் வணிகம் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக வேலைக்கு வந்த அங்குள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
அதேபோல இரண்டாவது நாளாகவும் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதால், தியாகராயநகர் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. தீ விபத்தின் காரணமாக ரங்கநாதன் தெருவிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. உஸ்மான் சாலை பகுதி முழுவதும் சுமார் ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கட்டடம் இடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இன்று 3வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க முடியாததால் 3வது நாளாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.