சென்னை: எரிந்து முடிந்து இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் என்னவோ விதிகளைமீறி கட்டப்பட்டதுதான், ஆனால் அதற்கு முழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், தீ விபத்தால் கட்டடத்துக்கோ அல்லது கட்டடத்தில் உள்ள பொருட்களுக்கோ எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இழப்பீடு கோரினாலும், இந்த விதிமீறல் விஷயங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய விஷயங்களாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
"மாநகராட்சி இந்த கட்டடத்துக்கு வரி வசூலித்து வருகிறது, தண்ணீர் வரி உட்பட அனைத்து வரிகளும் ஒரு சாதாரண கட்டடத்துக்கு வசூலிப்பது போல வசூலிக்கப்பட்டுத்தான் வருகிறது. இப்படி அரசு சார்பில் இந்த கட்டடத்துக்கு சட்ட ரீதியாக அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கும் போது இங்கே விதிமீறல் கட்டடம் என்பது எங்கே வருகிறது? எனவே, இவற்றையும் நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என்று காப்பீடு நிறுவனம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
எப்படி இருந்தாலும் இது குறித்த இறுதி முடிவு காப்பீட்டு ஆய்வாளரிடம்தான் உள்ளது. அவர், முறையாக அனுமதி பெற்ற 4 மாடிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். விதிகளை மீறிக் கட்டப்பட்ட 4 கட்டடங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விடவும் வாய்ப்பு உண்டு. சம்பவ இடத்தில், காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் குழு முகாமிட்டுள்ளது. அடுத்தக்கட்ட தகவல்கள் குறித்து அதிகாரிகள் குழு காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் அளித்து வருகிறது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதாவது, அனைத்து ஆவணங்களையும், பொருட்கள் இருந்ததற்கான ஆதாரங்களையும் காப்பீட்டு ஆய்வாளர் ஆய்வு செய்த பிறகே காப்பீட்டுத் தொகை இறுதி செய்யப்படும் என்று பதிலாகக் கிடைக்கப் பெற்றுள்ளது. காப்பீடு தொடர்பான விஷயங்கள் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
கூடுதலாக, இந்த கட்டடத்தில் விற்பனைக்கு இருந்த பொருட்கள் அனைத்தும் சந்தை மதிப்புக்குத்தான் காப்பீடு செய்யப்பட்டிருக்கும் என்றும், அதனை வாங்கிய விலைக்கு காப்பீடு செய்யப்படாது என்றும், அது பொருட்களை வாங்கிய மதிப்பு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.