தமிழக மக்களுக்குப் பணியாற்றவே தேசிய வாய்ப்புகளைத் தவிர்த்தவர் கருணாநிதி: சோனியா காந்தி பாராட்டு

தமிழக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே தேசிய அளவில் கிடைத்த வாய்ப்புகளை திமுக தலைவர் கருணாநிதி தவிர்த்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பாராட்டுத்
தமிழக மக்களுக்குப் பணியாற்றவே தேசிய வாய்ப்புகளைத் தவிர்த்தவர் கருணாநிதி: சோனியா காந்தி பாராட்டு

தமிழக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே தேசிய அளவில் கிடைத்த வாய்ப்புகளை திமுக தலைவர் கருணாநிதி தவிர்த்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் 94 -ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு சோனியா காந்தி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:
தற்கால அரசியல் தலைவர்களில் சிறந்த தலைவரான கருணாநிதியின் 94 -ஆவது பிறந்த தின விழா சிறப்பாக நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு நூற்றாண்டுகளிலும் மக்களுக்கு பணியாற்றிய தலைவர்களாக சிலரை மட்டுமே கூற முடியும்.
1940 -இல் தொடங்கிய கருணாநிதியின் அரசியல் வாழ்வு, 20 -ஆம் நூற்றாண்டில் பெரும் பங்களிப்பை செலுத்தி, 21 -ஆம் நூற்றாண்டிலும் 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. முதல்வராக கருணாநிதி இருந்த காலங்களில் சிறந்த நிர்வாகியாகவும், திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கைகளை நிறைவேற்றுவதில் விரைந்து முடிவு எடுக்கக்கூடியவராகவும் திகழ்ந்தார். எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தபோது அறிவுப்பூர்வமான வாதங்களால் ஆளும் கட்சியை இயக்குபவராக இருந்தார்.
அரசியலை முழு மூச்சாகக் கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வரும் அபூர்வ மனிதர். பத்திரிகையாளர், நாவலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பரிணமிக்கும் அறிவார்ந்த தமிழறிஞர். தொல்காப்பியம், திருக்குறளுக்கு சொல்லோவியம் தீட்டியுள்ளார்.
கடந்த 1969 - ஆண் ஆண்டு முதல் திமுகவின் நிகரற்ற தலைவராக இருந்து வருகிறார். 1957 -இல் இருந்து போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றுள்ளார். தேசிய அளவில் பணியாற்றுவதற்கு அவருக்கு பல வாய்ப்புகள் வந்தபோதும், அதை தவிர்த்துவிட்டு, தமிழக மக்களுக்காகவே பணியாற்றி வருகிறார்.
1971, 1980, 2004, 2009 ஆகிய காலகட்டங்களில் காங்கிரஸுக்கு நெருக்கடியான சூழலில் திமுக ஆதரவு அளித்ததை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
கடந்த சில மாதங்களாக கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவேன்.
தற்போது அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ள தருணத்தில், அவரின் லட்சக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளுடன் என் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். அவர் பூரண நலம் பெற வேண்டும் என்று தனது சோனியா காந்தி வாழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com