மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூருக்கு வியாழக்கிழமை வந்த அவர் அளித்த பேட்டி:
மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தச் சட்டத்தின் மூலம் மாடு வளர்ப்பு, இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தீவன வியாபாரம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மோடி அரசு முயற்சிக்கிறது.
மாட்டு வணிகத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். அவர்களின் பொருளாதாரம் மேம்படுகிறது. ஒட்டுமொத்தமாக இவற்றை முடக்கிவிட்டு கறிமாடு வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே பால், இறைச்சிக்காக பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழக அரசை முழுவதுமாக மத்திய அரசு தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துவிட்டது. அதனால்தான் தமிழக முதல்வர், அமைச்சர்கள் தில்லிக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மே 17 இயக்க திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளைத் திரும்ப பெற்று, அவரை விடுவிக்க வேண்டும். இந்திய அரசை கார்ப்பரேட் மயமாக்கி இருப்பதுதான் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை என்றார் அவர்.