தமிழகத்தில் அரசியல் செய்ய துணிச்சல் வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற, மத்திய அரசின் 3 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு விளக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த சாதனை விளக்க நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 9 -ஆம் தேதி கோவையில் நடைபெறும் விழாவில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும், சென்னையில் நடைபெறும் விழாவில் நிதின் கட்கரியும் கலந்து கொள்கின்றனர்.
கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, அடுத்த இரண்டு மாதத்துக்குள் நிச்சயம் தமிழகம் வருவார்.
எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்போவதும் இல்லை; அசரப்போவதும் இல்லை. தமிழகத்தில் அரசியல் செய்ய துணிச்சல் வேண்டும்.
விதிமுறை மீறல் கட்டடங்களுக்கு அரசு அனுமதி தரக்கூடாது. இனி இதுபோன்ற தீ விபத்துக்கள் நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.