அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் எங்களுக்குத் தான் என்றார் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
அதிமுகவை வழி நடத்துகின்ற ஒன்றரை கோடி தொண்டர்கள் தான், கட்சியை வழிநடத்துவது யார் என முடிவு செய்ய வேண்டும். அதிமுக-வில் தனிப்பட்ட குடும்ப ஆதிக்கம் இருக்கக் கூடாது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த இரு கோரிக்கைகளும் நிறைவேறும் பட்சத்தில் 2 அணிகளும் இணையும். அதிமுக பொதுச்செயலர் பதவி தேர்வு முறைகளுக்குள்பட்டது. அதன்படி, சசிகலா பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டதே தவறு. இதை தேர்தல் ஆணையத்திடம் ஆணித்தரமாக, உரிய ஆவணங்களுடன் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
எங்களுக்கே சாதகமான தீர்ப்பு வரும். உண்மையான அதிமுக நாங்கள் தான். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கு தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றார் பன்னீர்செல்வம்.