மதுரை: அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் கட்சிப் பணி ஆற்றுவதற்கு முதல்வரின் அனுமதி தேவை என்பது கேலிக்கூத்து என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் முயற்சியில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், நேற்று முன்தினம் தில்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியானர்
இந்நிலையில் அ.தி.மு.க.அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விபரம் பின்வருமாறு:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழி நடத்தியவர்கள் சசிகலாவும், தினகரனும்தான். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவும் அவர்களே காரணம். இவர்கள் இருவரின் உழைப்பை விட்டு விட்டு ஆட்சியையும், கட்சியையும் நடத்த முடியாது.
டி.டி.வி.தினகரன் கட்சிப் பணி ஆற்றுவதற்கு முதல்வரின் அனுமதி தேவை என்பது போல சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளது கேலிக் கூத்தான ஒன்றாகும். தினகரனுக்கு கட்டளையிடும் அதிகாரம் அவருக்கு இல்லை.
இந்த கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு தினகரனுக்குத்தான் உள்ளது. அவர்கள் துணையுடன் இந்த இயக்கத்தை அவர் வழி நடத்துவார்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.