ஜூன் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என பேரவை செயலர் பூபதி அறிவித்துள்ளார்.
ஜூன் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என பேரவை செயலர் பூபதி அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அன்றைய தினம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதன் பிறகு, மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டப்பேரவையில், 2017 - 2018 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அன்றே பேரவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் சட்டப்பேரவை கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பணப் பட்டுவாடா புகாரால் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்ட நிலையில் பேரவையை இன்னும் கூட்டப்படாமல் இருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள், உட்கட்சிப் பூசல் போன்ற காரணங்களால் பேரவை கூட்டப்படாமல் தள்ளிப்போனது.

இதற்கிடையே, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் நேரில் வலியுறுத்தினார். பின்னர் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேரவைத் தலைவரிடம் இதே கோரிக்கையை முன்வைத்தனர். அதன்பிறகும் பேரவை கூட்டப்படவில்லை.

இதையடுத்து பேரவையை உடனடியாக கூட்ட பேரவைத் தலைவருக்கும் முதல்வருக்கும் உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதினார். ஆனால், பேரவையை கூட்டப்படாமல் கடந்த 11-ஆம் தேதி கூட்டத்தொடரை இறுதி செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது.

ஏனென்றால், இனி மானிய கோரிக்கை மீதான விவாதங்களை பேரவையில் நடத்துவதற்கு புதிதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்தால் தான் முடியும்.

தமிழகத்தில் கடும் வறட்சி, குடிநீர் கட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பெண்களின் தொடர் போராட்டம், விவசாயிகள் தற்கொலை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு பிரச்சினை உள்ளிட்ட பல் வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதால் பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தியது.

இந்தநிலையில் தில்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘தமிழ்நாடு மாநில ஜிஎஸ்டி மசோதா, வரும் ஜூன் மாதம் பேரவையில் தாக்கல் செய்யப்படும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து ஜூன் 7 அல்லது 8 ஆம் தேதியில் கூட்டம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று வரும் 14 ஆம் தேதி காலை 10 மணி பேரவை கூடுகிறது என பேரவை செயலர் பூபதி அறிவித்துள்ளார்.

சுமார் 30 முதல் 35 நாட்கள் வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யவும், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

குடிநீர் தட்டுப்பாடு, நீட் தேர், மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com