திமுக மேடையில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டுவது, கருணாநிதிக்கு செய்யும் அவமானம் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடிமரம் பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த தேர்தலின்போது கருணாநிதி காங்கிரஸ் கட்சியை பார்த்து கூடா நட்பு கேடில் முடியும் எனக் கூறினார். இன்று அதே காங்கிரஸ் கட்சியினரை மேடையில் அமர்த்தி கருணாநிதிக்கு புகழாரம் சூட்டுகின்றனர். இது அவருக்கு செய்யும் அவமானம்.
கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல் கற்களில் ஹிந்தியில் எழுத உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து பேசினால் ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்கின்றனர். ஆனால், அவர்களது குடும்ப வாரிசுகள் ஹிந்தியில் பேசவும், எழுதவும் செய்கின்றனர் என்றார் அவர்.