பால் கலப்பட விவகாரம்: 2 வாரங்களில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பால் கலப்படம் தொடர்பான விவகாரத்தில் 2 வராங்களில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பால் கலப்பட விவகாரம்: 2 வாரங்களில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பால் கலப்படம் தொடர்பான விவகாரத்தில் 2 வராங்களில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் பால் முக்கிய இடம் வகிக்கிறது. அண்மையில், தனியார் பால் நிறுவனங்கள் பாலை கெட்டுப் போகாமல் இருக்க அதில் வேதிப் பொருள்களை கலப்பதாக, தமிழக பால்வளத் துறை அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார்.

கடந்த 5 மாதங்களாக நடைபெற்ற ஆய்வுக்கு பின்னரே, பாலில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தகுந்த ஆதாரம் இருப்பின், கலப்படம் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

கலப்பட விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் அச்சுறுத்தல் போக்கை மட்டுமே கடைப்பிடித்து வருகின்றனர். எனவே, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 272 -இல் திருத்தம் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

பால் கலப்படம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், பால் கலப்படம் தொடர்பான விவகாரத்தில் 2 வராங்களில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பால் கலப்படம் தொடர்பான விவகாரத்தில் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பால் கலப்பட பிரச்சனை மிகவும் முக்கியமானது என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, முக்கியமான பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.  

வரும் 19 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

தமிழக அரசு சார்பில் பால் கலப்படம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com