பிறந்து 15 நாளே ஆன இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தாய் கைது

நாகர்கோவில் அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் அருகே புத்தன்துறை காற்றாடித்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (29). இவர்களுக்கு 2 வயதில் அனுஷ்கா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், திவ்யாவுக்கு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. பிரசவத்துக்கு பின்னர் திவ்யா கீழசரக்கல்விளையில் உள்ள தன் தாயார் வீட்டுக்குச் சென்றார்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) அந்த இரட்டைப் பெண் குழந்தைகள்  திடீரென உயிரிழந்துவிட்டன. பின்னர், குழந்தைகளின் உடல்களை காற்றாடித்தட்டில் உள்ள கண்ணனின் வீட்டுக்கு கொண்டுவந்து வீட்டின் பின்புறத்தில் புதைத்துவிட்டனர்.

இந்நிலையில், குழந்தைகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் அவை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. அவர், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். கோட்டாறு காவல் நிலையத்தினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, குழந்தைகள் சாவில் மர்மம் நீடிப்பதால் அவர்களது சடலத்தை தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அருளரசு முன்னிலையில் குழந்தைகளின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே பரிசோதனை மேற்கொண்டனர். குழந்தைகளின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகுதான் குழந்தைகளின் இறப்பு குறித்த உண்மை தெரியவரும்.

குழந்தைகளின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டதையொட்டி, காற்றாடித்தட்டுவிளை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குழந்தைகளின் தாய் திவ்யாவிடம் விசாரணை நடத்திய போது, ஏற்கனவே, ஒரு பெண்குழந்தை இருப்பதால் இரட்டை பெண் குழந்தைகளை கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com