பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தணடனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் முயற்சியில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், நேற்று முன்தினம் தில்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியானர்.
நேற்று சென்னை வந்திருந்த அவர், இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க சென்றுள்ளார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன், ஜக்கையன், கதிர்காமு, பார்த்திபன், பாலு, தங்கதுரை, ஜெயந்தி மற்றும் இன்பதுரை உள்ளிட்ட பத்து பேரும் சென்றிருக்கின்றனர்.
இவர்களுடன் கோவை அதிமுக எம்.பி.நாகராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வடிவேல் மற்றும் சாமி ஆகியோரும் உடனிருந்த்னர்.
இன்று மதியம் பரப்பன அக்ரஹாரா சென்று சேர்ந்த தினகரன், தற்பொழுது சிறை வளாகத்தில் சசிகலாவை சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம் சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில், பதினேழு தமிழக அமைச்சர்கள் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை செய்த அவர்கள், தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.