சென்னை: தமிழகத்தில் விரைவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 14 செ.மீ. மழையும், வலங்கைமானில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
முன்னதாக மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீன் நேற்று தனது பேஸ்புக்கில் கூறியிருந்ததாவது, மாலை வேளையில் சென்னையின் தெற்கே மழை இருந்தது. இப்போது வட மேற்கு மற்றும் உட்புற சென்னையில் மழை பெய்து வருகிறது. இது சிறிது நேரத்திற்கான மழையாக இருந்தாலும், மழையின் அளவு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.
இது ஒரு முன்னோட்டமே. இன்னும் ஒரு சில தினங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர் பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதனால், சென்னைவாசிகள் இதுவரை அனுபவித்து வந்த கடுமையான வெப்பத்தில் இருந்து விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதியாகிறது.