நீலகிரி: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட சயானை கோத்தகிரி போலீஸார் கைது செய்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குட்டி (என்கிற) ஜிஜினை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஜிஜின் கோத்தகிரி காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சயான் பாலக்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தார். காயமடைந்த சயான் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சயானை கோத்தகிரி போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்காக தனிப்படை போலீஸார் சயானை கோத்தகிரி அழைத்துச் செல்லப்படுவதாகவும், கைது செய்யப்பட்ட சயான் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை சதீஷன், திபு, சந்தோஷ், உதயகுமார், வாளையாரைச் சேர்ந்த மனோஜ், ஜம்ஷேர் அலி, ஜிதின் ஜாய், மனோஜ் மற்றும் சயான் உள்ளிட்ட 9 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.