தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேரளத்தில் கடந்த மே 30-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. தற்போது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தமிழகத்தின் அனேக இடங்களில் பரவலாகவும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்...: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 140 மி.மீ. மழையும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் 80 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் தென்மேற்குப் பருவமழை தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடங்கக்கூடிய சாதகமான சூழல் நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.