ஒசூர்-சேலம்-நெய்வேலிக்கு விமான சேவை: தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் முதல் கட்டமாக ஒசூர், சேலம், நெய்வேலி ஆகிய இடங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி

தமிழகத்தில் முதல் கட்டமாக ஒசூர், சேலம், நெய்வேலி ஆகிய இடங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தமிழக அரசுக்கு இடையே வியாழக்கிழமை செய்து கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கெனவே உள்ள விமான ஓடுதளங்கள், விமான நிலையங்களை மேம்படுத்தவும், நாட்டில் பயன்பாட்டில் இல்லாத, குறைவான பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து சேவையை ஏற்படுத்த முடிவு செய்தது.
தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்து இணைப்புத் திட்டம் ("உதான்') தமிழகத்திலும் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மண்டலங்களுக்குள் விமானப் போக்குவரத்தை எளிமையாக்கி, குறைவான கட்டணத்தில் சாதாரண மக்களும் விமானப் பயணம் மேற்கொள்ள ஏதுவாக விமான சேவை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம்.
மூன்று இடங்கள்: தமிழகத்தில் முதல் கட்டமாக ஒசூர், சேலம், நெய்வேலி ஆகிய இடங்களில் இத்திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்கப்படும். இதைச் செயல்படுத்துவதன் மூலம் சிறிய நகரங்களில் விமான சேவை தொடங்கப்பட்டு, அந்த நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைந்து, தொழில், வர்த்தகம் பெருகி வேலைவாய்ப்பு அதிகரிக்க வழி ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், போக்குவரத்துத் துறை செயலாளர் ஆர்.என்.சௌபே, தமிழக போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆயிரம் ரூபாய்க்கு கீழ்... தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களுக்கு இயக்கப்படும் இந்த விமானங்களின் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்குக் கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கட்டணங்கள், விமான சேவை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com