சென்னை: ஆட்சி நிர்வாகத்தில் மட்டும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும், கட்சி பணிகளை டிடிவி தினகரன் கவனித்துக் கொள்வார் என்று அதிமுக அம்மா அணி செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறுகையில், தமிழகத்தை ஆளும் தகுதி பெற்றுள்ள ஒரே தலைவர் தினகரன். அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். வரும் டிசம்பர் 23 ஆம் தேதி குமரி மாவட்டம் அருமணையில் நடைபெறும் கிறிஸ்து விழாவில் பங்கேற்க அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதே கிறிஸ்தவ விழாவில் கலந்து கொண்ட பிறகுதான் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். எனவே, நீங்களும் கிறிஸ்தவ விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அருமணை கிறிஸ்தவ அமைப்பினர் அழைத்ததன் பேரில் அதில் பங்கேற்க தினகரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி நிர்வாகத்தில் மட்டுமே அமைச்சர்கள் கவனம் செலுத்தினால் போதும். கட்சிப் பணிகளை தினகரன் கவனித்துக்கொள்வார். கட்சியை வழி நடத்தும் சர்வ வல்லமை தினகரனுக்கு உண்டு என்றார்.