ஈரோடு: மணல் விலை ஒரு வாரத்துக்குள் குறையும், அதன்பின்னர் மலிவு விலை மணல் வீடு தேடி வரும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் ரூ.692 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவர் பேசினார்.
பழமையும், பெருமையும் மிக்க ஈரோடு நகரம், கட்டமைப்பிலும், சாலை மேம்பாட்டிலும் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் ஜெயலலிதா.
போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வகையில் ஈரோடு-பெருந்துறை-காங்கேயம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இங்கு மேம்பாலம் அமைப்பதினால் ஈரோட்டுக்கு பெருந்துறை, காங்கேயம், பழனி, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் தடையின்றி சென்று வர பயனுள்ளதாக அமையும்.
ஏரிகள், குளங்கள், அணைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
விவசாயிகள், தங்கள் பகுதிக்கு அருகேயுள்ள அணைகள், குளங்கள், ஏரிகளில் இருந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்று, அவர்களுக்குத் தேவையான வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.
மணல் விலை அதிகரித்துக்கொண்டு செல்வதாக என்னிடம் கருத்து தெரிவித்தனர். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுக அரசு, இந்த மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது.
இன்னும் ஒரு வார காலத்துக்குள் சீர் செய்யப்பட்டு, மணல் குறைந்த விலையிலே பொதுமக்களின் இல்லம் தேடி வரும். தேவையான அளவுக்கு, மணலை, அரசு வழங்கும் என்றார் முதல்வர் பழனிசாமி.