குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, பெற்ற தாயே குழந்தைகளுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த கொடூரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜாகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கவிதா, இவர் கணவனை இழந்தவர். கணவனை இழந்த நிலையில் கவிதா மறுமணம் செய்துகொண்டு மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகின்றார். குழந்தைகள் இருவரும் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், முதல் கணவர் மூலம் பிறந்த இரு குழந்தைகளையும், அவர் சரிவர கவனிப்பதில்லை என்றும், சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று குழந்தைகளின் உடல் முழுவதும் பெற்ற தாயே சூடு வைத்தபோது, வலி தாங்காமல் குழந்தைகள் அலறியதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குழந்தைகளை காப்பாற்றி உள்ளனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த குழந்தைகளை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தைகளின் தாய் கவிதா மற்றும் அவளது இரண்டாவது கணவரையும் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் இருவரும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.