ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது என அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா வந்ததும், அவரை யார் அழைத்தனர் என்பதும் எனக்கு தெரியாது. தொலைக்காட்சிகளில் வந்த செய்தியை பார்த்துதான் என்ன நடந்தது என்பதை நான் அறிந்துகொண்டேன்.
ஜெயலலிதா வீடான வேதா நிலையம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் எங்களுக்கு கோவில் போன்றது. ஜெயலலிதா நம் அனைவருக்கும் தெய்வம் போன்றவர். அவரது சொத்தை எடுத்து கொள்வதற்கு நான் யார்?
40 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த அவரது நேர்முக உதவியாளர் பூங்குன்றன், ராஜம் மற்றும் சிலரே ஜெயலலிதாவின் வீட்டில் உள்ளனர்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஒரு முறைதான் நான் அங்கு சென்று வந்தேன். நான் ஏன் அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும். அந்த சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது.
அப்படி இருக்க, தீபா என் மீது ஏன் புகார் தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்பதை அவர் தெரிவித்து அந்த சொத்துக்களை எடுத்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும், தொடர்போ இல்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.