தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆட்சி நடத்துவதாக திரைப்பட இயக்குநர் சீமான் தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது ராமநாதபுரம் கியூபிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணைக்கு சீமானும், அமீரும் செவ்வாய்க்கிழமை வந்தனர்.
இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட நீதிபதி லிங்கேசுவரன் ஜூன் 19ஆம் தேதி இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்த சீமான் கூறியது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. எதிர்ப்பாளர்களை பணிய வைக்க மத்திய அரசு வழக்குப்பதிவு செய்து வருகிறது. தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் தமிழகத்தில் அதிமுக அரசை கலைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை பாஜக அமல்படுத்தும் என்றார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், வழக்குரைஞர்கள் பலரும் உடன் இருந்தனர்.