சென்னை: ஊடகங்களில் வெளியானது போல் தேனி பொட்டிப்புரம் மலைப்பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டம் தமிழகத்திலிருந்து மாற்றப்படவில்லை என்று அந்த திட்டத்திற்கான செயல் அதிகாரி விவேக் தாடர் விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகத்தில் தேனி மாவட்டம் பொட்டிப்புரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு முதலில் பொதுமக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது
இந்த வழக்கில் பசுமைத் தீர்ப்பாயமானது நியூட்ரினோ திட்டதிற்கு சுற்றுச் சூழல் அனுமதி அளிக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் நியூட்ரினோ திட்டமானது தமிழகத்திலிருந்து மாற்றப்பட உள்ளது என்றும், ஆந்திராவில் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது என்றும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது.இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான செயல் திட்ட அதிகாரி விவேக் தாடர் செய்தியாளர்களுக்கு சில விளக்கங்களை அளித்தார். அப்பொழுது அவர் கூறியுள்ளதாவது:
ஊடகங்களில் வெளியானது போல் தேனி பொட்டிப்புரம் மலைப்பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டம் தமிழகத்திலிருந்து மாற்றப்படவில்லை. நியூட்ரினோ திட்டதிற்கு சுற்றுச் சூழல் அனுமதி அளிக்கப்பட்டது செல்லாது என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குப் பிறகு, நாங்கள் இரண்டாவது முறையாக விண்ணப்பித்துள்ளோம். தமிழக அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்.
மேலும் இந்த திட்டத்திற்கு நில ஒதுக்கீடு செய்வதிலும் தொடர்ச்சியாக தாமதங்கள் நிகழ்கிறது. இதனிடையே ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த திட்டத்தினை செய்லபடுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இவ்வாறு விவேக் தாடர் தெரிவித்தார்.