சென்னை: கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தின் வேளாண் துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் விவகாரம் குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும்முன் ஆந்திர அரசு தமிழகத்தை கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். தடுப்பணை கட்டும் ஆந்திர மாநிலத்தின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கொசஸ்தலை ஆற்றின் கிளை நதியான கொசாவை தமிழகத்தில் 354.32 ஏக்கர் நிலம் சாகுபடிக்காக நம்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்தி, தமிழகத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொண்ட பிறகுதான் இதன் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கொசஸ்தலை ஆற்றில் 4 இடங்களில் ஆந்திர அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தடுப்பணைகளைக் கட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக உடனடியாக நல்ல பதிலை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.