சென்னை: தமிழக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததாக எம்எல்ஏ சரவணன் கூறியதாக வெளியான விடியோ ஆதாரத்தை சபாநாயகர் தனபாலிடம் மு.க. ஸ்டாலின் அளித்தார்.
தமிழக எம்எல்ஏக்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக வெளியான விடியோ குறித்து மேலும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
அந்த ஆதாரங்களை, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தனது அறைக்குக் கொண்டு வந்து கொடுக்குமாறு சபாநாயகர் தனபால் கூறினார்.
சபாநாயகர் சொன்னபடி, மு.க. ஸ்டாலின் இன்று மதியம், அவரது அறைக்குச் சென்று, விடியோ அடங்கிய சிடி ஆதாரங்களை தனபாலிடம் அளித்தார்.
முன்னதாக, விடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால், சட்டபபேரவையில் இது குறித்து விவாதிக்க அனுமதிப்பீர்களா என்று ஸ்டாலின் கேட்டார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.