புதுதில்லி: ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக, தகவல்களை அளிக்குமாறு கோரி, சென்னையைச் சேர்ந்த வைரக்கண்ணன் என்பவர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எட்டு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதில் ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம் மற்ற கேள்விகளை, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வரவில்லை என்று கூறி பதிலளிக்க மறுத்து விட்டது.
அந்த குறிப்பிட்ட ஒரு பதிலில்தான், ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்தவுடன் வருமான வரித்துறை அதிரடியாக பல இடங்களில் சோதனை செய்தது. அப்பொழுது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கத் தொடர, தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது. இந்த தகவலானது தற்பொழுது பெரும் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.