சென்னை: கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மீன்பிடிக் காலம் இப்போது தான் தொடங்கியுள்ள நிலையில் இனிவரும் காலங்களிலும் இதே நிலை தொடர்ந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். எனவே, சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும், அவர்களின் படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்களப்படையினரால் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும். அத்துடன் இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.