முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ராமலிங்கம், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து தடை பெற வேண்டும். நிரந்தரத் தீர்வாக அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கும் அவசர சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான அவசரச் சட்டத்தை, நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களையும் மத்திய அரசே நிரப்புகிறது. இதில் 50 சதவீத இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்காகப் பெற வேண்டும் என்றார்.