சென்னை: கலப்பட பால் விவகாரத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் சில தனியார் பால் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பாலில் கலப்படம் நடைபெறுவதாகவும், இதனால் அதனை அருந்துவோரின் உயிருக்கே ஆபத்து உண்டாவதாகவும், தமிழக பால்வளத்துறை அமைச்ச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் அதிர்ச்சி புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கலப்பட பால் விற்பனையை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள விரிவான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை இன்று காலை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 20111-ஆம் ஆண்டு தொடங்கி 2017-ஆண்டு வரை, ஆவின் பால் உட்பட மொத்தமாக 886 பால் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை என்பது சோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது
பால் தவிர பால் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அவற்றில் 57 பொருட்களின் தரம் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாதிரிகள் எந்த பிராந்தியத்தில் இருந்து தருவிக்கபட்டவை என்பது குறித்த தகவல்களும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.