நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்ட தாமதித்தால் மத்தியப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில தலைவர் கோ.க. மணி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அன்புமணி ராமதாஸ் பேசியது:
கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொள்ளிடம் ஆற்றில் உடனடியாக தடுப்பணைக் கட்ட வேண்டும். இனியும் அரசு காலம் தாழ்த்தினால் அடுத்தகட்ட போராட்டம் இதுபோன்று அமைதியான, அறவழியில் நடக்காது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து 2014 வரை உள்ள 10 ஆண்டுகளில் 500 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் மூலம் எந்த பயனுமின்றி கடலில் கலந்து வீணாகியுள்ளது. ஆண்டுதோறும் 35 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது.
கொள்ளிடம் ஆற்றில் புதிதாக 10 மணல் குவாரிகள் அமைக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இனியும் ஒரு பிடி மணல் அள்ளக்கூடாது. 27 மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்றார் அன்புமணி.