எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் ஆதாரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய பாஜக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் நலன் கருதி 6 அம்ச திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. பொருளாதார புரட்சியை உருவாக்கும் வகையில் நடைமுறைக்கு வரும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் பொதுமக்கள் சலுகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜிஎஸ்டி வரி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சிலர் பரப்புரை செய்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணம் வழங்கப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த புகாரை அவர் நேர்மையான முறையில் எதிர்கொள்ள வேண்டும். எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் ஆதாரங்களின் அடிப்படையில் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என்றார்.