சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணம் செய்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜிடம் ரூ. 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:
அதிமுக மாநில அமைப்புச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருப்பவர் ஏ.கே.செல்வராஜ். இவர் சென்னையில் இருந்து நீலகிரி விரைவு ரயிலில் குளிர்சாதன வகுப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் பீளமேடு ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது அவர் வைத்திருந்த கைப்பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தப் பையில் ரூ. 50 ஆயிரம் வைத்திருந்தார்.
இதுகுறித்து கோவை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, செல்வராஜின் கைப்பை கழிவறையில் கிடந்துள்ளதை பயணச் சீட்டு பரிசோதகர் பார்த்துள்ளார். ஆனால், அதில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மட்டும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.