ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு? சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் பேட்டி!
பெங்களூரு: விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து சசிகலாவை சந்தித்த பின்னர் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் பேட்டியளித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களே வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை,அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார்.அவருடன் அவரது மனைவி அனுராதா, உறவினரான மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோரும் உடன் சென்றார்கள்.
அவர்களுக்கு முன்னதாக அதிமுக எம்.பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சசிகலாவை சந்தித்து பேசினார். தினகரனுடனான சந்திப்புக்கு பிறகு அதிமுக அம்மா அணியின் செந்தில் பாலாஜி உட்பட ஐந்து எம்.எல்.ஏக்களும் சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.
சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது:
விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பொதுச் செயலாளரான சசிகலாதான் முடிவு செய்வார். அதே போல் சசிகலாவுடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து பேசினோம்.
இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.