அதிமுக முழுமையாக எங்களிடம் இருப்பதால் பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இரட்டை இலை சின்னம் உறுதியாக கிடைக்கும் என்றார் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
அதிமுக சட்ட விதிப்படி பொதுச் செயலருக்குத் தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அதிகாரம் இருக்கிறது. ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டு அந்த இடம் காலியாக இருக்கும்பட்சத்தில் பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அதிகாரம் உள்ளது என்று அதிமுக சட்ட விதியில் உள்ளது.
ஆகவே, பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் உறுதியாக எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். தற்போது இந்தப் பிரச்னை இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. தொண்டர்களின் இயக்கமாக இருக்கும் அதிமுக முழுமையாக எங்களிடம் இருப்பதால் உறுதியாக எங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.
தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் விருப்பம். அவசியம் ஏற்பட்டால் நாங்களும் ஆளுநரைச் சந்திப்போம் என்றார் அவர்.
இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன் மகள் திருமண நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.