கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை நிலுவைத் தொகை: அரசு உறுதி
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிலுவைத் தொகையை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அளிப்பது குறித்து ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. க.கார்த்திகேயன் (திமுக) அளித்த கவன ஈர்ப்பு அறிவிப்பு திங்கள்கிழமை விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. அதற்கு, அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதில்:
கள்ளக்குறிச்சி ஆலையானது நடப்பு அரவைப் பருவம் வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மத்திய அரசின் விலையான நியாயமான மற்றும் ஆதாய விலை முழுவதும் வழங்கி விட்டது. இதற்காக 2015 முதல் 2017 வரையிலான நிதியாண்டுகளில் ரூ.168.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில அரசின் பரிந்துரை விலை நிலுவையை வழங்க நிதி ஆதாரம் இல்லை. மொத்தமாக ரூ.33 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகையை வழங்க அரசிடம் வழிவகைக்கடன் கோரப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.
நிகழ் அரவைப் பருவத்தில் நிலுவையில் உள்ள தொகையான ரூ.4 கோடியானது ஆலையால் அளிக்கப்பட உள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.