காஞ்சிபுரத்தில் புதிய விளையாட்டு வளாகம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள கட்டடங்களை இடித்து விட்டு அதே இடத்தில் நவீன தரத்துடன் கூடிய புதிய விளையாட்டு வளாகம் கட்டப்படும்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து அம்சங்களுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குள வளாகம் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகம் அருகே கெனாயிங் மற்றும் கயாக்கிங் விளையாட்டுகளுக்கு முதன்மை நிலை விளையாட்டு மையம் ஏற்படுத்தப்படும்.